Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேமுதிக மாவட்ட செயலாளர் திமுகவில் இணைந்தார்

டிசம்பர் 16, 2020 09:42

சென்னை: வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர் பா.மதிவாணன் திமுகவில் இணைந்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிவாணன் திமுகவில் இணைந்து கொண்டார். அப்போது வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, செய்தி தொடர்பு மாநில இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

பின்னர் மதிவாணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளேன். விரைவில் வடசென்னை மாவட்ட தேமுதிக கட்சி தொண்டர்கள் திமுகவில் இணைய உள்ளனர். 

தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட நோக்கம் திசை மாறியதால் தற்போது அதிலிருந்து வெளியேறி உள்ளேன். கட்சி தொடங்கப்பட்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல நிலையில் இருந்தார். தற்போது கட்சியில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் கட்சித் தலைவரான விஜயகாந்த்க்கு தெரியுமா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. அதனால் திமுகவில் இணைந்து உள்ளேன். 

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரிக்கையை கூட்டணிக்காக முன்வைக்காமல் 41 சீட் கொடுத்தால் மட்டும் கூட்டணி வைப்போம் என சொல்வதில் இருந்து தேமுதிக கட்சி நிலை தெரிகிறது.

கட்சியில் உள்ள நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். இது ஒரு தொடக்கம் தான். வரும் நாட்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் திமுகவில் சேருவார்கள். தேமுதிக கட்சியில் நடைபெறக் கூடிய எந்த ஒரு செயல்பாடும் கட்சித் தலைவரான விஜயகாந்திற்கு தெரிந்து நடக்கவில்லை. தேமுதிக கட்சி ஒரு குடும்ப கட்சியாகவே மாறி விட்டது. இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்