Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி; இருவரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

டிசம்பர் 17, 2020 08:26

சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சென்னையில் மோசடி செய்த கும்பலை பேருந்து, ரயில், விமான நிலையம் என 5 குழுக்களாக சென்று பாதிக்கப்பட்ட பொது மக்களே பிடித்து கோயம்பேடு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஒரிசாவை சேர்ந்த ராஜூ என்பவர் அதே மாநிலத்தை சேர்ந்த சுமார் 50 பேருக்கு மலேசியாவில் கட்டட வேலை வாங்கி தருவதாகக் கூறி அவர்களை விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்து, முன்பணமாக அவர்களிடம் இருந்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

இதன் பின்னர் மலேசியாவுக்கு செல்வதற்கான முழு தொகையான 50 ஆயிரத்தில் மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை விசா கிடைத்த பின்னர் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், விசா தயாராகிவிட்டதாக கூறி 50 பேரையும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னைக்கு வரவழைத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஓர் தனியார் ஓட்டலில் தங்கவைத்துள்ளார். 

பின்னர், அந்த ஹோட்டலுக்கு ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சுப்ராத் குமார் போலோ என்பவருடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் 50 பேருக்கும் மலேசியாவுக்கான போலி விசாக்களை கொடுத்துள்ளனர்.

பின்னர் அனைவரிடமிருந்தும் தலா 40 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு, காலை 9 மணிக்கு விமான நிலையத்தில் தயாராக இருக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்று உள்ளனர்.

இந்நிலையில் ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு சென்று வந்த ராஜேஷ் குமார் மதன் என்பவர் விசாவில் உள்ள பார்கோடை அருகில் இருந்த இன்டர்நெட் மையத்தில் பரிசோதித்து பார்த்தபோது அது போலியானது என தெரிய வந்து உள்ளது. 

பின்னர், சுப்ராத் குமார் போலோவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, செல்போன் ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதன் பின்னர் 50 பேரும் 5 குழுக்களாக பிரிந்து தியாகராய நகர் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எக்மோர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம் என தேடியுள்ளனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு குழு தேடிக்கொண்டு இருந்தபோது சுப்ராத் குமார் போலோ  உட்பட 5 நபர்கள் பெங்களூருக்கு தப்பிச் செல்ல இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவர்களை பிடிக்க முயன்றபோது, 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். ராஜேஷ்குமார் பாண்டா, தினேஷ் பட்ரா என இருவர் மட்டுமே பிடிபட்டனர். 

இதையடுத்து அவர்களை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச் சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்