Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் -விசாரணை ஆணையம்

டிசம்பர் 17, 2020 10:36

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை கிட்டத்தட்ட 26 விசாரணைகள் நடந்துள்ள நிலையில், கடந்த 6 மாத காலமாக கொரோனா காரணமாக விசாரணை நடைபெறவில்லை. தற்போது மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி சூட்டின்போது தூத்துக்குடி வந்த நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று பேட்டி அளித்திருந்தார். அது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ரஜினிகாந்த் அதற்கு ஆஜராகாமல், அவர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "வரும் ஜனவரி மாதத்துக்குள் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சம்மன் அனுப்பி அவர் விசாரணை செய்யப்படுவார்" என்று தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்