Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுங்கச்சாவடி ஜிபிஎஸ் கட்டணத்தால் 5 ஆண்டில் ரூ.1,34,000 கோடி கிடைக்கும்: மத்திய அமைச்சர் கட்கரி

டிசம்பர் 18, 2020 08:35

சென்னை: சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை வசூலிக்க ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் வாயிலாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,34,000 கோடி கிடைக்கும்" என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் (அசோசாம்) நிறுவன வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 

"நாடு முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பப் பயன்பாட்டை அரசு இறுதி செய்துள்ளது. இதன்மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லாத இந்தியா உருவாகும்.

வாகனங்களின் இயக்கத்தைப் பொறுத்து சுங்கக் கட்டணம் வாகன ஓட்டிகளின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளப்படும். தற்போது அனைத்து வணிக ரீதியான வாகனங்களிலும் கண்காணிப்புத் தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது. பழைய வாகனங்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை அரசு பொருத்தும்.

வரும் மார்ச் மாதத்திற்குள் சுங்கச்சாவடிகளின் மூலம் ரூ.34,000 கோடி கிடைக்கும். சுங்கக் கட்டணத்தை வசூலிக்க ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் வாயிலாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,34,000 கோடி கிடைக்கும்.

வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், ஏழ்மையை நீக்கவும் தொழில் வளர்ச்சி மிகவும் அவசியம். உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பொதுத்துறை, தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். இதற்குத் தேவையான உதவிகளை அரசு வழங்கும்" இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

தலைப்புச்செய்திகள்