Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் ஓஎல்எக்ஸில் விற்பனைக்கு விடப்பட்டது தொடர்பாக 4 பேரை உத்தர பிரதேச காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2014, 2019 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் மோடி வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் உள்ள அவரது அலுவலகம் தற்போது ஓஎல்எக்ஸில் 7.5 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு விடப்பட்டது.
ரவிந்திரபுரியில் அமைந்துள்ள பிரதமரின் எம்.பி அலுவலகம் விற்பனைக்கு விடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 4 பேரை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில், "ஜவஹர் நகர் காலனியில் உள்ள நால்வர் பிரதமரின் வாரணாசி அலுவலகத்தின் புகைப்படத்தை ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 7.5 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு விடப்படுவதாக அவர்கள் இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
காவல் துறைக்கு இதுகுறித்து தெரிய வந்ததைத் தொடர்ந்து, இணையதளத்திலிருந்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது. 4 அறைகள், 4 பாத்ரூம்கள் கொண்ட வில்லா விற்பனைக்கு வருவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. விற்பனையாளரின் பெயர் லக்சுமிகாந்த் ஓஜா எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.