![](admin/uploads/.5cd3cc36619a28.22192397.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருப்பதி, குமுளி, நாகர்கோவில், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், நகரப் பகுதிக்குள்ளும் டவுன் பஸ், மினி பஸ் ஆகியவை இயக்கப்படுகின்றன.
அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களைத் தனியாருக்கு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் படிப்படியாகத் தனியார் மயமாகும் என்ற அச்சம் ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது. புதுவை அரசின் இந்த முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிஆர்டிசி ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
பிஆர்டிசியில் 200-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திடீரெனத் தங்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். பணிக்கு வந்த அவர்கள் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு ஒன்றுகூடிப் பணியைப் புறக்கணித்தனர்.
வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளை மட்டும் பிஆர்டிசி நிர்வாகம் நிரந்தர ஊழியர்களைக் கொண்டு இயக்கியது. வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட ஆட்கள் பற்றாக்குறையால் நகரம், கிராமப் பகுதிகளில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத் தரப்பில் விசாரித்தபோது, "புதுவை- கோரிமேடு, கன்னியக்கோவில் வீராம்பட்டினம், திருக்கனூர், கரையாம்புத்தூர், நல்லவாடு, மடுகரை, மண்ணாடிப்பட்டு, காலாப்பட்டு, கனகசெட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதுபோல நகரப் பகுதிக்குள் மட்டும் இயக்கப்படும் மினி பஸ்களும் நிறுத்தப்பட்டன. போராட்டத்தால் சுமார் 40 பேருந்துகள் இயங்கவில்லை" என்றனர்.