![](admin/uploads/.633838c1c36602.16224088.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருடு போன சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஸ்ரீ ஸநாதன தர்ம தியான மையத்திற்கு சொந்தமான ஸ்ரீதேவி கருமாரி பீடம் இயங்கி வருகிறது. இந்த பீடம் உள்ள வளாகத்தில் கருமாரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 170 கிலோ எடையில் 2 அடி உயரம் கொண்ட பஞ்சலோக அம்மன் உற்சவர் சிலை உள்ளது.
இந்த சிலையை பீடத்தின் நிர்வாகியான செல்வசுப்பிரமணியம் என்பவரது மகனான இராகவேந்திரன் என்பவர் மாதனுர் தேவிகாபுரத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த 30 ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு பரதராமியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் 2 பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான 2 அடி உயர ஐம்பொன்னாலான அம்மன் சிலை திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், சிலை வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த வலம்புரி சங்கு, 16 உபசார விளக்குகள், பூஜை பாத்திரங்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து இராகவேந்திரன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐம்பொன் சிலை கொள்ளை போன சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் அருகே ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பஞ்சலோக சிலை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.