Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி : வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தேனியில் ரிலையன்ஸ் - ஜியோ சிம், மொபைல்களை உடைத்து தூக்கி எறிந்து ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேனியில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் நடைபெற்றது.
தேனி அல்லிநகரம் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் ஜியோ சிம் கார்டுகள் மற்றும் மொபைல் போன்களை சாலையில் தூக்கி எறிந்து உடைத்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அதனைத் தொடர்ந்து ஜியோ சிம் கார்டிலிருந்து ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களாக தங்களை மாற்றிக் கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.