Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொண்டன்கூட அதிமுகவில் முதல்வராகலாம்: எடப்பாடி பழனிசாமி

டிசம்பர் 27, 2020 08:31

சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. டிசம்பர் 19ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி. ஜெயலலிதா, கருணாநிதி என்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என சிலர் நினைக்கின்றனர். எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிட முடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என பிரச்சாரக் கூட்டத்தில் மறைமுகமாக பாஜகவை விமர்சித்துப் பேசினார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக வரலாற்றிலேயே 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அமைத்தது அதிமுக தான். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் யாரும் தொழிலதிபர்கள் கிடையாது, சாமானியர்கள். எதிரிகள் கூட உச்சரிக்ககூடிய தலைவர்தான் எம்.ஜி.ஆர். அவர் உருவாக்கிய இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள்.

தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க தான், நாளை நீங்களும் முதல்வராகலாம். இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். சில புல்லுருவிகள் அதிகமுவை வீழ்த்த நினைத்தன; அது தவிடுபொடியாகிவிட்டது. உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது” என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்