Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹரியானாவில் 10 நாட்களில் 4 லட்சம் கோழிகள் இறப்பு

ஜனவரி 06, 2021 01:57

ஹரியானா: கடந்த 10 நாட்களில் ஹரியாணாவில் சுமார் 4 லட்சம் கோழிகள் இறந்துள்ளன. இதற்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமா என அம்மாநில அரசின் சார்பில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை அடுத்து எச்5என்8 எனும் பறவைக் காய்ச்சல் பயமுறுத்தத் தொடங்கி உள்ளது. இதன் பாதிப்பு குளிர் நிலவும் சூழலால் வட இந்தியாவில் அதிகமாகி வருகின்றன. 

கடந்த 10 தினங்களில் ஹரியானாவில் சுமார் நான்கு லட்சம் கோழிகள் இறந்துள்ளன. இதற்கு பறவைக் காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுகிறது. இதனால், ஹரியாணா மாநில கால்நடை வளர்ப்புத்துறையின் மருத்துவர்கள் கோழிகளின் இறப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதன் மாதிரிகள் எடுக்கப்பட்டு பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள பிராந்திய ஆய்வு பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

மத்தியபிரதேசதிலும் காக்கைகள் இறப்பு: மத்தியபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் 376 காக்கைகள் திடீர் என இறந்துள்ளன. இம்மாநில அரசு கால்நடைத்துறை அதிகாரிகளின் கணக்கெடுப்பின்படி இந்தோரில் 142, மான்ஸரில் 100, அகர்மால்வாவில் 112, கர்கோனில் 13 மற்றும் செஹோரில் 3 காக்கைகள் இறந்துள்ளன.

இதுகுறித்து ம.பி. மாநிலக் கால்நடைத்துறையின் துணை இயக்குநரான பிரமோத் சர்மா கூறும்போது, ‘கடந்த 8 நாட்களில் குடியிருப்பு பகுதிகளில் 155 காக்கைகள் இறந்துள்ளன. இப்பகுதிகளில் ஏற்கெனவே இறந்த காக்கைகளுக்கு எச்5என்8 இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, மற்ற காக்கைகளுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருக்கும் என நம்புகிறோம்.’ எனத் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் 2,700 பறவைகள் இறப்பு: வெளிநாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரிய வகைப் பறவைகள் இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு வரும் காலம் இது. இவற்றில் சுமார் 2,700 அரியவகைப் பறவைகள் இமாச்சலப் பிரதேசத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை அம்மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள போங் அணை அரசு சரணாலயம் பகுதியில் இறந்து கிடந்தன. பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவை இறந்திருக்கும் என இமாச்சாலப் பிரதேசத்தின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவற்றின் மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே இமாச்சாலப்பிரதேச அரசின் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.

தலைப்புச்செய்திகள்