Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 190 இடங்களில்  கொரொனா தடுப்பூசி ஒத்திகை

ஜனவரி 08, 2021 11:21

சென்னை: இந்தியா முழுவதும் அவசரகால கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.

இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டு மகாராஷ்டிராவில் உள்ள சீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கும், ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பு மருந்துக்கும் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 3-ந்தேதி அனுமதி வழங்கியது.

இதையொட்டி தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு 10 நாட்களுக்குள் வரும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது. இதன்படி இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி மருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு முன்பாக அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களையும் பொருட்டு தடுப்பூசிகள் இல்லாமலேயே நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி ஒத்திகை முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந்தேதி முதல்கட்ட ஒத்திகை நாடு முழுவதும் 125 மாவட்டங்களில் நடைபெற்றது

. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

இதில் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஈக்காட்டுதாங்கல் மாநகராட்சி நகர்புற சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

இந்த ஒத்திகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், இட வசதிகள் எவ்வாறு உள்ளன என்பதையும் நடைமுறையில் செயல்படுத்தி பார்த்தனர். தேர்தல் சமயத்தில் கியூவில் வந்து முறைப்படி பதிவு செய்து ஓட்டுப்போடுவது தடுப்பூசி போட வருபவர்களுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. 

தடுப்பூசி ஒத்திகையில் கிடைத்த அனுபவங்களை ஒவ்வொரு மாநில அரசும் மத்திய சுகாதாரத்துறைக்கு விரிவாக அறிக்கை அளித்து இருந்தது. கொரோனா தடுப்பூசி போடும் பணி “கோ-வின்” இணைய தளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள 2,300 மையங்களில் கொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது கட்ட ஒத்திகை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது.  

ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 இடங்கள் வீதம் மொத்தம் 190 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. காலை 9 மணி முதல் 1 மணி வரை இந்த தடுப்பூசி ஒத்திகை நடந்தது.  தடுப்பூசி ஒத்திகையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் நேற்று இரவு சென்னை வந்திருந்தார். இன்று காலை அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி ஒத்திகையை பார்வையிட்டார்.

தலைப்புச்செய்திகள்