Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி : சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இடத்தில் பிரதி வாரம் சனிக்கிழமை ஆடு வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.
இந்த வாரச் சந்தைக்கு திருச்சி மட்டுமில்லாது துறையூர், முசிறி மண்ணச்சநல்லூர், லால்குடி மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள் வளர்ப்பவர்களும் ,வியாபாரிகளும் வந்து ஆடுகளை விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் இங்கு விற்பனை செய்யும் ஆடுகளை அதிகளவில் திருச்சி மட்டுமன்றி அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் தமிழர்களின் திருநாளான பொங்கல் விழா வரும் 14 ம் தேதி முதல் கொண்டாட உள்ள நிலையில் இன்று சமயபுரம் வாரச் சந்தையில் வழக்கத்தை விட அதிகளவில் வர்த்தகம் நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில், ஆடுகளை வாங்க வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியபாரிகள் முக கவசமின்றி கூடினார்கள்.
கொரோனா கால கட்டத்தில் ஆடுகள் வரத்து குறைவாக இருக்கும் என்ற நிலையில் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் கடந்தாண்டு பொங்கல் விழாவிற்கு நடந்த விற்பனையினை விட நிகழாண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.