Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் ரஜினி ரசிகர்கள் அறவழியில் போராட்டம்

ஜனவரி 10, 2021 10:39

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், கொரோனா பரவலால் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் சிலர் ரஜினியின் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், மக்கள் மன்றத்தில் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்களும், ரசிகர்களும் ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இதையடுத்து ரஜினி ரசிகர்கள், தங்களது பலத்தை காட்டும் வகையில் ஓரிடத்தில் கூடி ரஜினியை அரசியலுக்கு இழுப்பதற்காக முடிவு செய்தனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஜன.10-ந்தேதி (இன்று) அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும், மாநில தலைமையும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளில், ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி யாரும் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால் ரஜினி ரசிகர்கள் அதனை பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஜன.10-ந்தேதி (இன்று) நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவதற்கு முடிவு செய்தனர். மேலும் இந்த அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே #அரசியலுக்கு_வாங்க_ரஜினி என்ற வார்த்தை டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.
 

தலைப்புச்செய்திகள்