Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காஞ்சிபுரம் : உத்திரமேரூர் அருகே மாயமான எலக்ட்ரீசியன் 2 மாதங்களுக்கு பிறகு காட்டில் எலும்புக்கூடாக கண்டெடுப்பு. கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த கிளக்காடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ரூபேஷ்குமார் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள் உள்ள நிலையில் கடந்த நவம்பர் மாதம் ரூபேஷ்குமாரை காணவில்லை என 2 மனைவிகளும் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூபேஷ்குமாரை தேடிவந்தனர். இந்த நிலையில் களக்காடு அருகே உள்ள ஈச்சங்காடு அருகில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகூடு ஒன்று கிடப்பதை கண்ட பொதுமக்கள் சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் ஈச்சங்காட்டில் கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர்.
மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட செருப்பு மற்றும் உடைகளை ரூபேஷ்குமார் மனைவிகளிடம் காண்பித்தபோது, அது ரூபேஷ்குமார் எலும்புக்கூடு தான் என உறுதி செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அருகில் இருந்த மரத்தில் தூக்கு கயிற்றில் தொங்கி ரூபேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகின்றனர்.
மேலும் கொரோனா காலகட்டத்தில் எந்த வேலையும் இல்லாமல் மன உளைச்சலில் இருந்த ரூபேஷ்குமார், தான் தற்கொலை செய்யப்போவதாக கூறி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் எலும்பு துண்டுகள் மற்றும் மண்டை ஓட்டை ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.