Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

ஜனவரி 15, 2021 08:06

திருச்சி: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் சுகாதாரத்துறை வகுத்துள்ள தற்காப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாததால்தான் வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பலர் மெத்தனமாக இருந்து வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 450 என இருந்தது. இது தற்போது 7 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி 16-ந்தேதியில் இருந்து பயன்படுத்தப்படும். அன்று தேசிய அளவில் 3 ஆயிரம் பேர்களுக்கும், தமிழகத்தில் 166 மையங்களில் போடப்படும். முதல் கட்டத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் தன் விருப்பத்தின் பேரில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.

தமிழகத்தில் தற்போது வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். சமூகத்தில் முதல் நிலை பணியில் உள்ளவர்களுக்கும், காவல் துறையில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி என்பது நோய் வராமல் தடுக்க மட்டுமே. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்