Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தயக்கம் தற்போது பொதுமக்களிடையே இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு ஏற்கனவே 5 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகளும் 20 ஆயிரம் கோவேக்சின் மருந்துகளும் என மொத்தம் 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்திருந்த நிலையில் இன்றைய தினம் கூடுதலாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதார துறை வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்திற்கு வந்தடைந்தது.
இந்த கொரோனா தடுப்பு மருந்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது... ஏற்கனவே தமிழகத்திற்கு 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன.
இன்று கூடுதலாக 5 லட்சத்திற்கு 8 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகள் வந்துள்ளன. இதுவரை தமிழகத்திற்கு 10 லட்சத்து 65 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளன. இதுவரை தமிழகத்தில் 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . அதில் தமிழகத்தில் இது வரை 25 ஆயிரத்து 908 பேர் தடுப்பூசி மருந்துகளை எடுத்துக் கொண்டுள்ளனர் என்றார்.
தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும், சில தனியார் மருத்துவமனைகளும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர் . தனியார் மருத்துவமனைகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு மருத்துவர் சங்க தலைவர், செவிலியர்கள் மருந்துகளை போட்டுள்ளனர். முதலில் மருத்துவர்களுக்கு ஒருவித தயக்கம் இருந்தது உண்மைதான் அது இப்போது இல்லை ஒரு மருத்துவராக நாளை மறுதினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சராக இல்லாமல் ஒரு மருத்துவராக நான் தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொள்ள உள்ளேன் என தெரிவித்தார்.