Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லிக்குள் 100 கி.மீ தூரத்திற்கு டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

ஜனவரி 24, 2021 06:49

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 60வது நாளை எட்டி உள்ளது. விவசாயிகளுடன் இதுவரை 11 சுற்றுகளாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. 

குறிப்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள்  திட்டமிட்டுள்ளன. இதற்காக பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். 

இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கிவிட்டதாகவும், டெல்லிக்குள் 100 கிமீ தூரத்திற்கு டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவலுக்கு முரணாக காவல்துறையின் பதில் அமைந்துள்ளது. 

பேரணி செல்லும் பாதை தொடர்பாக விவசாய சங்கங்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கவில்லை என்றும், அதன்பிறகுதான் பேரணி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட முடியும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார்.

முன்னதாக, விவசாய சங்கங்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் பேரணி செல்லும் பாதை குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாய சங்க தலைவர் அபிமன்யு கோஹர் கூறும்போது, டிராக்டர் பேரணி டெல்லியின் காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளில் இருந்து தொடங்கும் என்றும், விரிவான விவரங்கள் பின்னர் இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்