Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி - கனிமொழி

ஜனவரி 30, 2021 11:20

புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் மற்றும் மக்கள் கிராமசபை கூட்டங்களில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று 2-வது நாளாக புதுக்கோட்டையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

முதலில் புதுக்கோட்டை பெரியண்ணன் மாளிகை தி.மு.க. அலுவலகத்தில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள நூலகத்தை பார்வையிட்டார். இதையடுத்து புதுக்கோட்டை உழவர்சந்தைக்கு சென்ற கனிமொழி எம்.பி., அங்கு வியாபாரிகளை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுக்கோட்டை உழவர் சந்தை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை. மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி தீர்வு காணப்படும்.

தற்போது தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களின் மனதில் உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது. மக்கள் கடந்த 10 ஆண்டு காலமாக கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.விற்கு அளிக்கும்.இது பிரச்சாரத்தின் போது மக்களின் எழுச்சி வாயிலாக எங்களுக்கு உறுதியாக தெரிகிறது என்றார்.பின்னர் முன்னாள் எம்.பி., வீரையா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து இச்சடி, சூரக்காடு, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை , புதுக்கோட்டை, கீழக்குறிச்சி, இலுப்பூர், விராலிமலையில் பிரச்சாரம் செய்யும் அவர் இரவு கீரனூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

தலைப்புச்செய்திகள்