Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அசாம், மேற்கு வங்காளத்தில் மோடி நாளை பிரசாரம்

பிப்ரவரி 06, 2021 07:33

புதுடெல்லி: மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். பிரதமர் மோடி நாளை மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு செல்கிறார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அசாமில் நாளை காலை இரண்டு ஆஸ்பத்திரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மாநில நெடுஞ்சாலைகளில் முக்கிய மாவட்ட சாலைகளை மேம்படுத்துவதற்கான அசாம் மாலா என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் மாலையில் மேற்குவங்க மாநிலம் ஹால்டிமாவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முக்கிய கட்டமைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் அமைத்துள்ள எல்.பி.ஜி. இறக்குமதி முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ரூ.1100 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு எல்.பி.ஜி.யை கையாளும் திறன் கொண்டதாகும். பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக 348 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோபி-துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.2400 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஹால்டியா, ரானிசாக்கில் நான்கு வழித்தடம் கொண்ட ரெயில்வே மேம்பாலம் மற்றும் மேம்பாலத்தையும் தொடங்கி வைக்கிறார். இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்காள கவர்னர், முதல்வர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மத்திய அமைச்சர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

அசாம் மற்றும் மேற்கு வங்காளத்துக்கு பயணம் மேற்கொள்ளும் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இரண்டு மாநிலங்களிலும் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். கடந்த இரண்டு வாரங்களில் 2-வது முறையாக பிரதமர் மோடி மேற்கு வங்காளம், அசாமுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்