Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: மத்திய அரசு ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவற்றில் பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் மத்திய அரசுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.எனவே இதற்கு என்ன மாற்று நடவடிக்கை எடுக்கலாம் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மத்திய நிதி அயோக் அமைப்பு இது சம்மந்தமான ஆய்வுகளை நடத்தியது.
அப்போது நஷ்டத்தில் இயங்கக்கூடிய பல நிறுவனங்களை மாற்று அமைப்புகளிடம் அல்லது தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு நடத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று கூறியது. மேலும் எந்தெந்த நிறுவனங்களை மாற்று அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்து இருந்தது.
அதன் அடிப்படையில் மத்திய அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மத்திய அரசு 300-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை நடத்தி வருகிறது. அதை 24 ஆக குறைக்க சிபாரிசு செய்கிறது. அரசு 4 பொதுத்துறைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் கீழ் 3 அல்லது 4 நிறுவனங்களை நடத்தலாம் என்றும் சிபாரிசில் கூறியுள்ளன.
இதுசம்மந்தமாக மத்திய அமைச்சரவை இறுதி முடிவு எடுக்கவுள்ளது. அப்போது பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்ட அறிவிப்புகள் ஏற்கனவே பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன. ஏர்-இந்தியா, பெட்ரோல் நிறுவனங்கள், வாகன நிறுவனங்கள் போன்றவற்றை விற்பது தொடர்பாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை, வங்கித்துறை போன்றவற்றில் குறிப்பிட்ட பகுதியை விற்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.