Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: திருநெல்வேலியில் சாலைகளை சீரமைக்க கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராம், தாலுகா செயலாளர்கள் சுடலைராஜ், ராஜகுரு ஆகியோர் முன்னிலையில் திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"ஸ்மார்ட் சிட்டி" என்று அழைக்கப்படும் "சீர்மிகு நகரம்" திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடை அமைத்தல், குடிநீர் குழாய்கள் பதித்தல் உள்ளிட்ட, பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்காக, மாநகரம் முழுவதிலும் சாலைகளில், பள்ளம் தோண்டப்பட்டு, அதன் காரணமாக, எல்லா இடங்களிலும் சாலைகள், குண்டும் குழியுமாக கிடக்கின்றன.
இதனால் பாதசாரிகளும், வாகனங்களில் பயணிப்போரும், அன்றாடம் அதிக அவதிக்குள்ளாகி, மிகுந்த சிரமங்களுடன், சாலைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இம்மாவட்டத்தில் பெய்த கனமழையினால், மாநகர சாலைகளின் குழிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், தண்ணீர் வெளியேற வழியின்றி, தேங்கி நிற்கின்றது.
இதன் காரணமாக, கொசுத்தொல்லைகள் அதிகரித்து இருப்பதுடன், சுகாதாரக்கேடும் நிலவி வருகிறது. எனவே, சாலைகளை உடனடியாக சீரமைத்து, அனைத்து பிரச்சினைகளுக்கும், உடனடியாக தீர்வு காண, முன் வரவேண்டும் என்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து கோஷங்கள் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று இருந்தனர்.