Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மெட்ரோ நிலையத்தில் 13 திருநங்கைகளுக்கு பணி

பிப்ரவரி 15, 2021 01:35

ராயபுரம்:சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த மெட்ரோ ரெயில் சேவையால் வட சென்னையில் போக்கு வரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 13 திருநங்கைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் முன்னேறும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளனர்.புதுவண்ணாரப்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது மற்றும் பயணிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பணியில் 30 வயதான திருநங்கை வினித்ரா தேவி அமர்த்தப்பட்டு உள்ளார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர் தனது பணி குறித்து பெருமையாக கூறியதாவது:-

பல வருடங்களாக துன்பங்களை தாங்கிய பின்னர் இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். இருளில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஒருவருக்கு இது நம்பிக்கையின் ஒளியாக உணர்கிறோம். இதனை பற்றிக் கொண்டு பெருமையுடன் முன்னேறுவோம். கஜகிஷ்ணன்:- மாநில அளவிலான கிரிக்கெட் வீரராகவும், தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட வீரராகவும் இருந்தேன். மக்கள் எங்களையும், எங்கள் வேலையையும் பார்க்கும் போது சகோதரத்துவத்தில் இருந்து அதிக அளவில் ஊக்கம் அளிக்கும்.

பவானி, கனிமொழி, பார்கவி ஆகியோர் கூறும் போது, “துன்புறுத்தலை எதிர்கொள்வது முதல் பாகுபாடு காண்பது வரை அனைத்தையும் பார்த்திருக்கிறோம். இப்போது மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதால் இந்த வேலையை செய்ய பெரிதும் எதிர்பார்க்கிறோம். இதற்கு பின்னர் எங்களை பலர் தேடுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பொதுமக்களுடன் நல்ல தொடர்பு கொண்டுள்ளதால் முழு திருப்தியுடன் உள்ளோம். எங்களை வேலைக்கு அமர்த்திய சென்னை மெட்ரோ ரெயில் நிலைய நிர்வாகத்தினருக்கு நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம்.

பொறியியல் பட்டதாரி அருண்கார்த்திக்:- நான் பகுதி நேர வேலைகளை செய்து பல ஆண்டுகளாக போராடினேன். தனியாக உயிர் வாழ்வது முதல் எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்து போராடி இருக்கிறேன். இந்த பணியில் சேர்ந்ததால் நான் சாதித்து இருக்கிறேன். நாங்கள் எதற்காக இருக்கிறோம் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். எங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்