Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டை குழந்தைகளாக பாவிப்பதுடன் அதனை கையாளும் திறனும், மருத்துவரான எனக்கு உள்ளது என புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா கவர்னர் தமிழிசைக்கு, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி கவர்னர் பதவி வழங்கப்பட்டது. இன்று அவர், புதுச்சேரியின் 31வது கவர்னராக பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று பதவியேற்று கொண்ட பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் மீது நம்பிக்கை வைத்து கூடுதல் பொறுப்பு கொடுத்துள்ளார்கள். பதவிப்பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. துணை நிலை கவர்னராக இல்லாமல், மக்களுக்கு துணை புரியும் கவர்னராக இருப்பேன்.
இந்திய தடுப்பூசியை வெளிநாட்டினர் அதிகம் வாங்குகின்றனர். ஆனால், நமது நாட்டில் குறைவாக உள்ளது வேதனையாக உள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ள தயங்கக்கூடாது. கவர்னர் மற்றும் முதல்வரின அதிகாரம் எனக்கு தெரியும். அவரவர் அதிகாராத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.
அரசு மீதான பெரும்பான்மை தொடர்பான கோப்பை இன்னும் பார்க்கவில்லை. இது தொடர்பாக அனைவரையும் ஆலோசித்து முடிவு செய்யப்படும். சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் நகர்வுகள் இருக்கும். எனது ஒவ்வொரு நகர்வும் புதுச்சேரி மக்களின் நலனுக்காக இருக்கும் என அவர் கூறினார்.