Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி

பிப்ரவரி 19, 2021 04:15

சென்னை: பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
புதுக்கோட்டை குளத்தூர் சீரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பெருமாள் மகன் மணிகண்டன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கிள்ளுக்கோட்டை குடிகாட்டுவயல் மருதமுத்து மகள் வேம்பரசி விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தென்னங்குடி மேலப்புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பொன்னேரி செப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேசின் மகன் தருண், மகள் தேவி ஆகிய இருவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மத்திகோடு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆண்டிபட்டி ராஜதானி கிராமத்தைச் சேர்ந்த சுரேகா தண்ணீர் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். பண்ருட்டி எ.புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சபூபதி மகள்கள் நந்தினி, வினோதினி, இன்பவள்ளி மகள் புவனேஸ்வரி ஆகிய 3 பேர் சித்தேரியில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

திண்டுக்கல் பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கவுதம் அணையில் மூழ்கி உயிரிழந்தார். வாடிப்பட்டி அய்யூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மலைத் தேனீக்கள் கொட்டியதில், உயிரிழந்தார். மதுரை தெற்கு வட்டம், ஐராவதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சேட்கனி மகன் ரியாஸ், சையது இப்ராஹிம் மகள் பரிதாபீவி ஆகிய இருவரும் வைகையாற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மானாமதுரை இளைய நாயக்கனேந்தல் கிராமத்தில் உள்ள பண்ணைக்குட்டையில் தஷ்வந்த்பிரியன், பாரதிராஜா பிரஜின்(எ)ஜஸ்டின் ஆகிய இருவரும் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காளையார்கோவில் பாப்பான்கண்மாய் கிராமத்திலுள்ள ஊரணியில் கணேசன் மகள் கன்ஷிகா, மகன் செல்வன் பழனிக்குமார் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மாமல்லபுரம் கிராமத்தைச் பழனி மகன் ராஜேஷ் மீன் பிடிக்க சென்றபோது, வலைக்குள் சிக்கி உயிரிழந்தார். விக்கிரவாண்டி கொசப்பாளையம் தட்சணாமூர்த்தி மகள் காவியா எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

திண்டுக்கல் அஞ்சுகுழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராதா, அவரது மகள் பவ்யஸ்ரீ, தண்டபாணி மகள் சரஸ்வதி ஆகிய 3 பேரும் சின்ன செங்குளத்தில் துணி துவைக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வாழப்பாடி வட்டம், சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவகாமி மகன் அருள்குமார் ஆனைமடுவு நீர்தேக்கத்தில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். போடி நாயக்கனூர் கோடாங்கிப்பட்டி ராஜா தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்தார்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 25 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்