Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து செய்யப்படும்

பிப்ரவரி 20, 2021 02:55

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:கடந்த 25-ந் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசாரத்தை அறிவித்து 29-ந் தேதி திருவண்ணாமலையில் முதல் கூட்டத்தை நடத்தினேன். இந்த கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம். அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை மனுக்களாக வாங்கி அதனை தீர்த்து கொடுக்க வேண்டும் என்பது தான்.

இதுவரை 133 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்கள் பெற்றுள்ளேன். 234 தொகுதிகளுக்கு செல்ல நான் முடிவு செய்துள்ளேன். இந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டத்தை அதிகளவில் ஆளும் கட்சியினர் பார்த்து வருகிறார்கள். அவர்கள் பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. அப்படியாவது அவர்களுக்கு புத்தி வரட்டும். சுய புத்திதான் இல்லை. நான் சொல்வதையாவது கேட்கட்டும்.

நீங்கள் பெட்டியில் போட்டுள்ள மனுக்களுக்கு ரசீதாக ஒரு அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டையை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். இன்னும் 3 மாதத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்து விடுவோம். வந்த மறுநாளே இந்த பெட்டிகள் திறக்கப்பட்டு உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். 100 நாளில் எல்லா மனுக்களையும் தீர்க்க முடியுமா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் தீர்த்து கொடுப்போம். அப்படி ஏதாவது மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிந்தால் இந்த அட்டையை எடுத்து கொண்டு நீங்கள் கோட்டைக்கு வரலாம்.

கோட்டைக்கு ஏன் முதல்-அமைச்சர் அறைக்கே வந்து கேட்கலாம். அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.அ.தி.மு.க ஆட்சியில் உண்மையான விவசாயிகளுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது. கலைஞர் பணியாற்றியது போன்று நான் பணியாற்றுவேன். அதனால் உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீர்ந்து விடும். பழங்குடியின மக்களுக்கு பல நலத்திட்டங்களை உருவாக்கி கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் யார் என்றெல்லாம் பார்க்கமாட்டோம். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் இந்த ஸ்டாலினிடம் இருந்து தப்பவே முடியாது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேட்டு போய் உள்ளது. 

தி.மு.க ஆட்சி அமைத்ததும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டு அது சீரமைக்கப்படும். தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், குழந்தைகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டுறவு சங்கங்களில் ஏழை விவசாயிகள் வாங்கிய 5 பவுன் வரையிலான நகைகடனை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தோம்.

அந்தவகையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுவினர் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்.
என்று ஸ்டாலின் கூறினார்.

தலைப்புச்செய்திகள்