![](admin/uploads/.6070271f8f1b08.69144620.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆத்தூர்:சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோடு அருகே கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் நிலத்தில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.3 பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவின் முதல் பிரிவில் கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்து காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை ஆகியவை இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றில் இருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும்,
அவற்றை சந்தைப்படுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 3-வது பிரிவில் பயிற்சி, கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் உள்ளன.இந்த நவீன பூங்கா தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மரபு திறன் மிக்க நாட்டின் மற்றும் கலப்பின காளைகளின் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையமும் இதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.1000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய இந்த கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதல்-அமைசர் எடப்பாடி பழனிசாமி நாளை (22-ந்தேதி) திறந்து வைக்கிறார். விழாவில் மேலும், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.