Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடி வருகை- போலீஸ் கட்டுப்பாட்டில் கோவை கொடிசியா வளாகம்

பிப்ரவரி 22, 2021 01:13

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 25-ந் தேதி தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக போலீசார் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவு போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. கொடிசியா வளாகத்துக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் இருந்து கோவைக்கு சிறப்பு படைப்பிரிவினர் வந்துள்ளனர். அவர்கள் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தமிழக கூடுதல் டி.ஜி.பி. அமரேஷ்புஜாரி கோவைக்கு வந்துள்ளார். அவர் கோவை மாவட்ட போலீசாருடன் பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வருகிற 25-ந் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக மாலை 3.30 மணிக்கு கோவைக்கு வருகிறார். பின்னர் கோவையில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனைதொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கொடிசியா வளாகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரையாற்றுகிறார்.
 

தலைப்புச்செய்திகள்