Saturday, 5th October 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி: தேனி அருகே கடனை செலுத்திய பின்பும் வீட்டை ஏலம் விட்டதாக தேசியமயமாக்கப்பட்ட (யூகோ) வங்கி முன்பு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகே உள்ள திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கருப்பையா. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலயில் தங்களது வீட்டில் முதல் தளம் கட்டுவதற்காக 5 லட்ச ரூபாயை தேசியமயமாக்கப்பட்ட (யூகோ) வங்கியில் வீட்டுக்கடனாக கடந்த 2011 ஆம் ஆண்டு தேனியில் உள்ள வங்கியில் வாங்கியுள்ளார். பின்னர் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் 7 லட்சம் வரை வங்கியில் செலுத்தியுள்ள நிலையில், முத்துலட்சுமிக்கு எந்த ஒரு தகவலும் அளிக்காமல் வங்கி நிர்வாகம் வீட்டை ஏலம் விட்டுள்ளதாக வங்கி முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி, விசாரணைக்காக தேனி காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து முத்துலட்சுமி கூறுகையில், ஐந்து லட்சம் வீட்டுக்காக கடன் பெற்றதையடுத்து, இது வரை ஏழு லட்சம் வரை வங்கிக்கு கட்டியுள்ள நிலையில், கூடுதலாக 5 லட்சம் கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதற்கிடையே வங்கியில் இருந்து தற்போது எந்த ஒரு முன்னறிப்பும் இன்றி ஏலம் விட்டுள்ளனர் என கூறினார். தேனியில் வங்கி முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.