Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி

மார்ச் 02, 2021 09:23

கொல்கத்தா:  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கொல்கத்தாவில் சந்தித்துப் பேசினார்.

மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற பாரதிய ஜனதா கட்சியின் கனவு பலிக்காது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டமன்றத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை  சந்தித்த தேஜஸ்வி யாதவ் சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற பாரதிய ஜனதாவின் கனவு நிச்சயம் பலிக்காது என்றார்.

நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், செம்மொழிகளை காப்பாற்றவேண்டும் என்றால் அரசியலமைப்பு சாசனம், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் பாரதிய ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தேஜஸ்வி கூறினார். இதற்காகவே மேற்குவங்க மாநிலத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து செயல்பட இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் களத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி, காங்கிரஸ் இணைந்த மகா கூட்டணி என மும்முனை போட்டி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மம்தா கூறியதாவது: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் அபார வெற்றி பெற்றது. ஆனால் பாஜக முறைகேடு செய்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பிஹாரில் விரைவிலோ, பின்னரோ ராஷ்டிரிய ஜனதா தள அரசு பதவியேற்கும். அந்த கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தை எனது தந்தையாக மதிக்கிறேன். அவரை விடுவித்தால், பாஜக இழப்பை சந்திக்க நேரிடும். இதன்காரணமாக அவர் சிறையில் கொடுமைப்படுத்தப்படுகிறார். பிஹாரில் பாஜக நீண்ட காலம் நிலைக்காது. மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற முடியாது" என்று தெரிவித்தார்.

பிஹாரை பூர்விகமாகக் கொண்ட மக்கள், மேற்குவங்கத்தின் ஹவுரா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் கணிசமாக வசிக்கின்றனர். எனவே திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மேற்குவங்க தேர்தலில் போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது. அந்த கட்சி சார்பில் 10 முதல் 12 தொகுதிகளை ஒதுக்க முதல்வர் மம்தாவிடம், தேஜஸ்வி யாதவ் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைப்புச்செய்திகள்