Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தலையொட்டி சென்னையில் 828 ரவுடிகள் பிடிபட்டனர்

மார்ச் 06, 2021 12:36

சென்னை:தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

சென்னையில் 135 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த கண்காணிப்பை உதவி கமி‌ஷனர்கள் மேற்பார்வையில், துணை கமி‌ஷனர்கள் கண்காணித்து வருகிறார்கள். தேர்தலையொட்டி ரவுடிகளை பிடிக்கும் நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க ரவுடி வேட்டையை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநகர போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:இதுவரை இன்று 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 194 ரவுடிகள் சிக்கினர். மொத்தம் 828 ரவுடிகள் சிக்கினர். அவர்கள், தாங்கள் தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி கொடுத்துள்ளனர்.

1,327 துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்