Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்களிப்பை அதிகரிக்க திருமண அழைப்பிதழ் வடிவில் பிரசுரம் வினியோகம்

மார்ச் 06, 2021 12:38

திருச்சி: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யவேண்டும் என்று தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்தஉத்தரவின் படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும் தங்களது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பொது மக்களிடம் வாக்களிப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறார்கள்.

 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியான நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மகேந்திரன் ஆகியோர் திருமண அழைப்பிதழ் வடிவில் துண்டு பிரசுரங்களை அச்சிட்டு அதனை வினியோகம் செய்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த துண்டு பிரசுரங்களில் ‘வாக்களிக்க அழைப்பிதழ்’ என தலைப்பிட்டு மணமக்கள் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் ‘இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்’ என்ற வாசகங்களுடன் 6-4-2021 காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெற உள்ளதால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ள தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமனித

இடைவெளியை கடைபிடித்து சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை செலுத்தும் படி அழைக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது.இந்த அழைப்பிதழில் அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும். இதுபற்றி புகார் தெரிவிக்க 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடவும் தவறவில்லை.
 

தலைப்புச்செய்திகள்