Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் திடீர் ரத்து

மார்ச் 16, 2021 06:35

திருச்சி:தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் மனுதாக்கல் செய்ததும் அங்கிருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் சென்றார். அங்கு தெற்கு ரத வீதியில் திறந்த வேனில் நின்றவாறு வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இதையடுத்து இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கீரமங்கலத்தில் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முதலில் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருந்த இடத்தை நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.இதற்கிடையே எந்தவித காரணமும் இன்றி மு.க. ஸ்டாலினின் தேர்தல் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மாவட்ட தி.மு.க. தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக வருகிற 19-ந் தேதி மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரம் செய்வார் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது, மு.க.ஸ்டாலின் அவசரமாக சேலம் செல்ல வேண்டிய பணி இருந்ததால் புதுக்கோட்டை மாவட்ட பிரசாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறினர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் இன்று ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய இருந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்