Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவல்- ஹோலி கொண்டாட்டத்துக்கு ஒடிசா மாநிலத்தில் தடை

மார்ச் 20, 2021 09:05

புவனேஸ்வர்: கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு பல்வேறு மாநிலங்களில் தற்போது அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிரா , குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 3,663 பேர் பாதிக்கப்பட்டனர். 10 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் ஹோலி கொண்டாடக் கூடாது என்று மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த மாநிலத்தில் 40 நாட்களுக்கு பிறகு தற்போது அதிகபட்சமாக 100-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கட்டாக், குர்தா மாவட்டங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு 110 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்