Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: ரெயில்வே அமைச்சகம்

மார்ச் 21, 2021 07:43

புதுடெல்லி: பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் ரெயில்களில் பயணிக்கிறார்கள். இதில் 20 சதவீதத்தினர், அதாவது 46 லட்சம் பேர் பெண்
பயணிகள். 

ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது
புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
ரெயில்வே அமைச்சகத்தின் அந்த புதிய வழிகாட்டுதல்கள் வருமாறு:- பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களை குறுகிய கால திட்டம்,
நீண்டகால திட்டம் என வகைப்படுத்திச் செயல்படுத்த வேண்டும். சந்தேக நபர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, ரோந்து மேற்கொள்வது போன்றவை
குறுகிய கால திட்டங்கள்.

ரெயில் நிலையங்களில் அடிப்படை உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவது போன்றவை நீண்டகால திட்டங்கள் ஆகும்.
ரெயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம், அணுகுசாலைகள், டெப்போக்கள் போன்ற இடங்களில் மின்விளக்கு வசதி இருப்பதை உறுதி செய்ய
வேண்டும். ரெயில் நிலைய வளாகத்தில் பாழடைந்த கட்டிடங்கள், பயன்பாடற்ற கட்டிடங்கள் இருந்தால் பொறியியல் துறையுடன் கலந்து ஆலோசித்து
அவற்றை இடித்துத் தள்ள வேண்டும். 

பயணிகள் காத்திருப்பு அறைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அடையாள அட்டை அணியாமல் ரெயில்வே ஊழியர்களை பணி செய்ய
அனுமதிக்கக்கூடாது. ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள, பயணிகளுக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இலவச வை-பை இணைப்புகள்,
ஆபாச தளங்களை பயன்படுத்த முடியாதபடி இருக்க வேண்டும்.

ரெயில்களிலோ, ரெயில் நிலையங்களிலோ மது அருந்துபவர்களை கைது செய்து, வழக்கு தொடர சிறப்பு பிரிவுகளை தொடங்கலாம். பெண்களுக்கு ஏதேனும்
இன்னல்கள் நேர்ந்தால் அதுகுறித்து காலதாமதம் இன்றி புகார் அளிப்பதற்கு ரெயில்வே ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உதவ வேண்டும். பெண்கள் தாமாக
முன்வந்து புகார் அளிக்க ஊக்கமளிக்கும் கருத்தரங்குகளை நடத்தலாம்.

கண்காணிப்பு கேமராக்கள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும். ஓடும் ரெயில்களில் பாதுகாவலர்கள் இரவு நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக கழிவறையை ஒட்டிய பகுதியில் கூட்டம் சேராமல் தடுக்க வேண்டும். எந்த நேரத்திலும் பாதுகாவலர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி, போலீஸ் உதவி, சட்ட ஆலோசனை, வழக்கு மேலாண்மை, உளவியல் மற்றும் சமூக ஆலோசனை, தற்காலிக
தங்குமிடம் போன்ற அனைத்தும் ஒன்றாக கிடைக்கும் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ரெயில்வே
அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்