Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுட்டெரிக்கும் வெயில்- 10 நாட்கள் மட்டுமே சென்னைக்கு குடிநீர் 

மார்ச் 22, 2021 06:58

ஸ்ரீமுஷ்ணம்:கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியில் இருந்து சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. அதோடு பாசன வசதிக்கும் இந்த ஏரி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, கீழணைக்கு தண்ணீர் வந்ததால் அந்த அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் ஏரியின் உச்ச நீர்மட்டமான 47.50 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாகவும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், பொதுப்பணித்துறையினர் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் மதகு வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கடலுக்கு அனுப்பினர். முழுவதையும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றினர். மேலும் வீராணம் ஏரிக்கரைச் சாலையில் காட்டு மன்னார்கோவில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை தடுப்பு கட்டைகளின் உயரத்தை அதிகரிக்கும் வகையிலும்,

ஏரியின் உள்பகுதியில் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்கும் நோக்கிலும் கடந்த 2 மாதங்களாக ஏரிக்கு தண்ணீர் வரத்தை பொதுப்பணித் துறையினர் முற்றிலும் நிறுத்தினர். இதனால் ஏரியில் மழைக் காலத்தில் தேக்கப்பட்ட தண்ணீர் சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது.தற்போது கடும் வெயில் வறுத்து எடுப்பதால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. 

சென்னைக்கு விநாடிக்கு 70 கன அடி நீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில், இந்த அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 5 கன அடி நீர் மட்டுமே சென்னைக்கு அனுப்பப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் 39.53 அடியாக உள்ளது.ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் தற்போது 54 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் ஏரியில் தற்போதுள்ள நீரைப் பயன்படுத்தி 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என்று தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்