Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமரைத் தெரியாது எனக் கூறிய சிறுவன்; பாடம் எடுத்த ஹெச்.ராஜா

மார்ச் 24, 2021 04:40

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரதமரைத் தெரியாது எனக் கூறிய சிறுவனுக்கு பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பாடம் எடுத்தார்.காரைக்குடி தொகுதியில் பிரச்சாரத்துக்கு வரும் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பது மட்டுமின்றி சிறுவர்களிடம் சிறிதுநேரம் ஜாலியாக பேசிவிட்டு தான் செல்கிறார்.அவர் பனம்பட்டி கிராமத்தில் பிரச்சாரம் செய்தபோது, அங்கிருந்த சிறுவர் ஒருவரிடம், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். ஏழாம் வகுப்பு என்று தெரிவித்த அந்த சிறுவனிடம் பிரதமர் பெயர் என்ன? என்று கேட்டார். ஆனால் அந்த சிறுவனோ தெரியாது என தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹெச்.ராஜா துண்டுப் பிரசுரத்தில் பிரதமர் மோடி புகைப்படத்தைக் காட்டினார். அதைப் பார்த்ததும் அந்தச் சிறுவன் இவரைத் தெரியும் என்று கூறினார். இதையடுத்து அவர் தான் பிரதமர் மோடி என்று ஹெச்.ராஜா கூறினார். அதன் பிறகு முகக்கவசத்தை மாட்டியபடி, துண்டுபிரசுரத்தில் தனது புகைப்படத்தை காட்டி யார் என்று கேட்டனர். ஆனால் பதில் தெரியாமல் அந்த சிறுவன் முழித்தான்.

இதனால் சுதாரித்துக் கொண்டு ஹெச்.ராஜா தனது முகக்கவசத்தை கழற்றினார். இதையடுத்து புகைப்படத்தில் இருப்பது நீங்கள் தான் என்று அந்த சிறுவன் கூறியதும் மன நிம்மதியுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் ஹெச்.ராஜா.அதேபோல் பீர்கலைக்காட்டில் பேசிய ஹெச்.ராஜா, ‘நாங்கள் வென்றால் இனி பெண்கள் கண்மாய் கரையிலேயே போய் உஷ், உஷ் என துணி துவைக்க வேண்டாம். வாஷிங்மிஷினே துணியை துவைத்து காயவைத்து கொடுக்கும் என்று கூறினார். இதை கேட்டதும் பெண்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

தலைப்புச்செய்திகள்