![](admin/uploads/.60464d2d4a0617.08084521.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுக்கோட்டை :வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களான புதுக்கோட்டை மூர்த்தி, விராலிமலை சரவணன், திருமயம் திருமேனிநாதன், ஆலங்குடி வைரவன், கந்தர்வகோட்டை ஆதிதிராவிடன், அறந்தாங்கி ஷேக் முகமது ஆகியோரை ஆதரித்து, புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வேனில் இருந்தவாறு டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
அப்பொழுது அவர் பேசும்போது, வேட்பாளர்களை சுட்டி காட்டி , இந்த வேட்பாளர்களின் குரல்களை சட்டசபையில் ஒலிக்கச் செய்வது உங்களது கடமை என்றும், இதுவரை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தங்களது சாதனைகளை கூற ஒன்றுமில்லை, அதை மறைப்பதற்கே இலவசங்களை அறிவித்து வருவதாக தெரிவித்தார். உங்களது பகுதியில் இருக்கும் குறைகளை இவர்கள் வெற்றி பெற்றபின் அதை தீர்த்து வைப்பதாக பத்திரம் எழுதித் தருவார்கள் என்றும் கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் வரும் தன்னை கேலி செய்யும் இவர்கள், கஜா புயல் வந்த பொழுது ஏன் ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.மக்களாகிய நீங்கள் தனக்கு உதவி செய்தால், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருடைய வருமானத்தையும் உயர்த்தி காட்டுவதாக சூளுரைத்தார். எனவே இதைச் செய்ய தனக்கு அனுமதி அளித்து, வெற்றிபெற செய்து, உங்களுக்காக உழைத்திட இவர்களுக்கு உத்தரவிடுமாறு கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பிரச்சாரத்திற்கு வந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு இடையே தமிழர் வேலை தமிழருக்கே என்ற உறுதிமொழி உங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லையே என்று கேட்ட இளைஞருக்கு, தமிழக இளைஞர்களுக்கு அவர்கள் பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர்க்குள் நான் வேலை வாய்ப்பு தருவேன் என்று உறுதியளித்தார்.