Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக ஆட்சி தொடர உயிரை கொடுக்க தயார்- இ.பி.எஸ் பிரசாரம்

மார்ச் 26, 2021 02:20

சிவகங்கை:அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்து வரும் பிரசாரத்தால் எனக்கு தொண்டை கட்டிவிட்டது. அதனால் சரியாக பேச முடியவில்லை. இருப்பினும் முடிந்த அளவு பேசுகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு பேச்சை தொடர்ந்தார்.

அ.தி.மு.க. ஆட்சி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாது. உலகிலேயே பொய் பேசுபவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் மு.க.ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும்.

அவர் எங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் கூற நான் தயாராக இருக்கிறேன். அவர் தயார்தானா? இதே திருப்பத்தூரில் மேடை அமைத்து விவாதிக்க தயாராக உள்ளேன். இரு தரப்பையும் கேட்டு மக்கள் தீர்ப்பளிக்கட்டும். மக்கள் தான் நீதிபதிகள். மக்கள் தீர்ப்பே... (மகேசன் தீர்ப்பு என பொதுமக்கள் கூறினர்.)மக்கள் இறுதி தீர்ப்பு கூறட்டும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள். மு.க.ஸ்டாலினின் முதல்- அமைச்சர் பகல் கனவு ஒருநாளும் பலிக்காது.

தொடர்ந்து சிவகங்கை தொகுதியில் சண்முகராஜா கலையரங்கம் முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:அ.தி.மு.க. அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்துள்ளது. தி.மு.க. எந்த திட்டமும் தந்ததில்லை. நான் விவசாயி என்று கூறினால் மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது.நான் அவருக்கு சவால் விடுக்கிறேன். நானும், மண்வெட்டு எடுத்து வருகிறேன். அவரும் மண்வெட்டு எடுத்து வரட்டும். இருவரும் வேலை செய்வோம். மக்கள் முடிவு செய்வார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்படும் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்ததா? அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதா? என்பதை பொது மேடையில் விவாதிக்க நான் தயார். ஸ்டாலின் தயாரா?.சிவகங்கை மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி கொண்டு வரப்படும். புறவழிச்சாலை அமைக்கப்படும். எண்ணற்ற திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும். எனக்கு தொண்டை வலி உள்ளது.

அதை பற்றி எனக்கு கவலை இல்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையவும், மக்களுக்காகவும் எனது உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளேன்.உயிரை கொடுத்தாவது அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்வேன். அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தலைப்புச்செய்திகள்