![](admin/uploads/.60aa0a9d065254.87797491.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஒசூர்: கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தமிழக- கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அருகே இண்டல்பள்ளி கிராமத்தில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற இருந்தது. இதற்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படும் இடத்தில் சாமியானா பந்தல் போட கட்டுமான நிறுவனம் முடிவு செய்தது.
இதற்கான பந்தல் போடும் பணிகள் நடைபெற்றது. பந்தல் போடும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். பந்தல் போடுவதற்காக இரும்பு கம்பியை தொழிலாளர்கள் 4 பேரும் தூக்கி சென்றார்கள். அப்போது அந்த வழியாக சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பியில் இரும்பு கம்பி உரசியதாக தெரிகிறது. இதனால் இரும்பு கம்பி மூலமாக 4 பேரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே 4 தொழிலாளர்களும் பரிதாபமாக உயிர் இழந்தார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அத்திப்பள்ளி போலீசார் 4 தொழிலாளர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெங்களூர் விக்ட்டோரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழிலாளர்கள், பரப்பன அக்ரஹாரா அருகே ஒசரோட்டில் பந்தல் போடும் தொழில் செய்பவரிடம் தொழிலாளர்களாக வேலை செய்தது தெரியவந்தது. பலியானவர்கள் ஆகாஷ் ( 30), மகாதேவ் (35), விஷகண்டா (33), விஜய் என்ற விஜய்சிங் (30) என தெரியவந்தது..
மேலும் இதுகுறித்து அத்திப்பள்ளி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி 4 தொழிலாளா்கள் பலியான சம்பவம் ஆனேக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.