Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மளிகைப் பொருட்கள் வாங்க ரூ.2 ஆயிரம் போலி டோக்கன்

ஏப்ரல் 08, 2021 12:04

கும்பகோணம்: கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மளிகைப் பொருள்களை வாங்குவதற்கான டோக்கன் கொடுத்ததாக அமமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து
முடிந்தது. இந்த நிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்கான போலி டோக்கன் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த டோக்கனில் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையின் பெயர் அச்சிடப்பட்டு ரூ.2 ஆயிரம் எனவும் அச்சிடப்பட்டிருந்தது.

வேட்பாளர் கொடுத்த அந்த டோக்கனை கொண்டு வந்து குறிப்பிட்ட அந்த கடையில் கொடுத்து ரூ.2 ஆயிரத்துக்கான மளிகை பொருட்களை வாக்காளர்கள் கேட்டுள்ளனர். ஆனால்
மளிகைக்கடையின் உரிமையாளரோ, வாக்காளர் கொண்டு வந்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் கடைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து டோக்கனை கொடுத்து மளிகை பொருட்களை கேட்டதால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் அந்த டோக்கனுக்கும், தங்கள் கடைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என கடையின் முன்பு நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியுள்ளார்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஷேக்முகமது கூறியதாவது:-

நான் கடந்த 25 ஆண்டுகளாக இங்கு கடையை நடத்தி வருகிறேன்.
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நான் டோக்கன் வழங்கியது கிடையாது. ஆனால் கடந்த 5-ந் தேதி இரவில் இருந்து என்னுடைய
கடை முகவரி அச்சிட்ட டோக்கனை பலரும் கொண்டு வந்து இலவசமாக மளிகை பொருட்களை கேட்கின்றனர். அன்று இரவு
மட்டுமே சுமார் 200 பேராவது வந்து கேட்டிருப்பார்கள், நான் அப்படி
யாருக்கும் டோக்கன் கொடுக்கவில்லை என கூறினேன். எனவே
வேட்பாளர் வழங்கிய டோக்கனுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை என பிரிண்ட் எடுத்து ஒட்டி விட்டேன்.

இந்த நிலையில் கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மளிகைப் பொருள்களை வாங்குவதற்கான டோக்கன் கொடுத்ததாக அமமுக பிரமுகர் கனகராஜ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்