Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மகுடஞ்சாவடி: சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர் வாலிபரை தாக்கி வீட்டை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை முருகன் நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் உமாபதி (வயது 37). இவர் தாரமங்கலம் ஒன்றிய பா.ம.க. விவசாய அணி தலைவராக உள்ளார். கடந்த 2 வருடமாக கட்சி பணி செய்யாமல் ஒதுங்கி இருந்து வந்தார். தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் உமாபதி தி.மு.க. வேட்பாளர் ராஜேசுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த பா.ம.க.வைச் சேர்ந்த சிலர் நேற்று உமாபதி வீட்டிற்கு சென்று கட்சி பணிக்கு வராமல் தற்போது தி.மு.க.வுக்கு ஏன் வேலை செய்தாய்? என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர், உமாபதி வீட்டிற்குள் புகுந்து வீட்டை அடித்து நொறுக்கி, அவரையும் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த உமாபதி ரத்த வெள்ளத்தில் வெளியில் ஓடினார். இதையறிந்த அக்கம், பக்கத்தினர் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உமாபதியை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.