Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போராட்டத்தை தொடர்ந்தால் எஸ்மா சட்டம் பாயும்’: கர்நாடக அரசு எச்சரிக்கை

ஏப்ரல் 09, 2021 11:31

பெங்களூரு: கர்நாடகத்தில் 2-வது நாளாக அரசு பஸ்களின் போக்குவரத்து சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதற்கிடையே போராட்டத்தை தொடர்ந்தால் போக்குவரத்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். முதல் நாளில் தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

முதல் நாளில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.17 கோடி இழப்பு ஏற்பட்டது. அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் மூலம் பஸ்களை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மேலும் போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள், ஊழியர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நாளை (அதாவது இன்று) பணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஊழியர்களில் ஒரு பகுதியினர் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான குடியிருப்புகளில் வசிக்கும் ஊழியர்களை உடனே வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் அந்த ஊழியர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

தங்களை வெளியேற சொன்னால் எங்கே செல்வோம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு வழங்கும் குறைந்த சம்பளத்தை கொண்டு குடும்பத்தை நடத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தினா்.

இதற்கிடையே முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "போக்குவரத்து ஊழியர்கள் முன்வைத்த 10 கோரிக்கைகளில் 8 கோரிக்கைளை நிறைவேற்றியுள்ளோம். சம்பள உயர்வு 8 சதவீதம் வழங்க முடிவு செய்துள்ளோம். 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க முடியாத நிலை உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால், தனியார்  பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து தனியார் பஸ்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளோம்" என்றார்.

கர்நாடக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சம்பள உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதி இல்லை.

இந்த நிலையில் 35 சதவீத சம்பள உயர்வு வழங்குமாறு கேட்பது நியாயமா? இவ்வளவு சம்பள உயர்வு வழங்க நிதி எங்கிருந்து கிடைக்கும். 35 சதவீத சம்பள உயர்வு வழங்கினால் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி தேவைப்படுகிறது.

இதனால் ஊழியர்கள் கேட்பது  போல் 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க சாத்தியமே இல்லை. அரசு 8 சதவீத சம்பள உயர்வு வழங்க தயாராக உள்ளது. தற்போது உள்ள  நெருக்கடி நிலையை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்-மந்திரி எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். முதலில் வேலை நிறுத்தத்தை கைவிட்டு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். நாங்கள் இன்னும் 2 நாட்கள் பொறுமை காப்போம். ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடாவிட்டால், எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைப்புச்செய்திகள்