Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: சென்னையில் ஆய்வு தொடங்கியது

ஏப்ரல் 10, 2021 10:42

சென்னை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் விதித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதை தடுக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை, பஸ்களில் நின்று பயணம் செய்ய கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதே போல் சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூக்கு மற்றும் வாயை மறைக்காமல் முகக்கவசத்தை முறையாக அணியாதவர்களுக்கு ரூ.200-ம், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது ரூ. 500-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்க வேண்டும் என்று மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். 
மேலும் வணிக வளாகங்கள், கடைகள், சலூன்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.5,000 அபராதமும், கட்டுப்பாட்டு பகுதி விதிகளை வாகனங்கள் மூலம் மீறுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் விதித்து வருகிறார்கள். சுகாதார ஆய்வாளர்கள் வீதி வீதியாக சென்று ஆய்வு செய்து அபராத நடவடிக்கையை மேற்கொண்டனர். வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத மளிகைகடைகள், காய்கறி கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

கிருமி நாசினி, உடல் வெப்ப பரிசோதனை செய்தல் போன்ற தடுப்பு பணிகளை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் அபராத இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த பகுதி அதிகாரிகள், ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அபராத நடவடிக்கையின்போது ஒரு சில இடங்களில் வாய் தகராறும், மோதல்களும் ஏற்பட்டன. அபராத தொகையை செலுத்த சிலர் முன்வரவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியில் நேற்று முன்தினம் வரை கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ. 3 கோடியே 71 லட்சத்து 62 ஆயிரத்து 192 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்