Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கரோனா தடுப்பூசி மேல் பழியைப் போடக்கூடாது: விவேக்

ஏப்ரல் 15, 2021 07:26

நடிகர் விவேக் இன்று (ஏப்.15) சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதன் பின்னர், விவேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கரோனா தடுப்பூசி குறித்து பலவித வதந்திகள் பொதுமக்களிடையே உலா வருகின்றன. கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால், பாதுகாப்பு உண்டு. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். இந்தியாவில் ஒரு நாளுக்கு 2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தில் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 7,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.

முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியும் ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால், கரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு.

இதைச் செலுத்திக்கொண்டால் கரோனா தொற்று வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உண்டாகும். அதுவரை நாம் பாதுகாப்பில்லாமல் இருந்து கரோனா வந்தால் நாம் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் சமூகப் பாதுகாப்பு வளையத்துக்குள்தான் நாம் இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். அவர்களை நம்பி பொதுமக்கள் அனைவரும் சீக்கிரமாக கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும். யாருக்கும் எந்தப் பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதுதான் அரசுத் தரப்பில் சொல்லப்படும் தகவல். சமூகப் பாதுகாப்புக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்". இவ்வாறு விவேக் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்