Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களிடம் 1.58 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்

ஏப்ரல் 18, 2021 07:06

மாநிலங்களிடம் ஒரு கோடியே 58 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளதாகவும், மேலும் கூடுதலாக ஒரு கோடியே 16 லட்சத்து 84 ஆயிரம் டோஸ்கள் அடுத்த வாரம் வழங்கப்படவிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் கூறினார்.

11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 தடுப்பு முன்னெச்சரிக்கை, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் இந்தக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம், டில்லி, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோவிட் பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகின்றன.

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், 2021 ஏப்ரல் 12-ஆம் தேதி உலகளவில் தினசரி கொவிட் புதிய பாதிப்புகளில் மிக அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார். அன்றைய தினம் உலகளவில் ஏற்பட்ட பாதிப்புகளில் இந்தியாவில் 22.8% பதிவானது.

“கடந்த 2020 ஜூன் மாதம் பதிவான 5.5 சதவீதம் என்ற எண்ணிக்கையை விட 1.3 மடங்கு அதிகமாக, 7.6 சதவீத புதிய கோவிட் பாதிப்புகள் இந்தியாவில் தற்போது பதிவாகி வருகின்றன. இதனால் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் அன்றாட எண்ணிக்கை, அபாயகரமான எண்ணிக்கையில் உயர்ந்து, தற்போது 16,79,000 ஆக பதிவாகியுள்ளது.

உயிரிழப்புகளின் வீதமும் 10.2 சதவீதம் என்ற வகையில் அதிகரித்துள்ளது. தினசரி புதிய பாதிப்புகள் மற்றும் தினமும் புதிதாக குணமடைவோர் ஆகியோருக்கான இடைவெளி அதிகமாகி வருவது, குணமடைவோரின் வீதத்தை விட தொற்று வேகமாகப் பரவுவதை எடுத்துரைக்கிறது”, என்று அவர் கூறினார்.

தடுப்பூசி போடப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை குறித்து விரிவாக டாக்டர் ஹர்ஷ் வர்தன் எடுத்துரைத்தார். மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கிய 14 கோடியே 15 லட்சம் டோஸ்களில் சுமார் 12 கோடியே 57 லட்சத்து 18 ஆயிரம் டோஸ்கள் (வீணான தடுப்பூசிகள் உட்பட) விநியோகிக்கப் பட்டுள்ளன.

மாநிலங்களிடம் ஒரு கோடியே 58 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளபோதும், மேலும் கூடுதலாக ஒரு கோடியே 16 லட்சத்து 84 ஆயிரம் டோஸ்கள் அடுத்த வாரம் வழங்கப்படவிருக்கின்றன.
 

தலைப்புச்செய்திகள்