Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்: மூன்றரை வருடங்களுக்கு பின் விடுதலையாகிறார்

ஏப்ரல் 18, 2021 10:03

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்கண்டின் ராஞ்சி உயர் நீதிமன்றம் மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால், கடந்த மூன்று வருடங்களாக சிறையில் இருப்பவருக்கு வெளியில் வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிஹாரின் முதல்வராக இருந்த லாலு, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கினார். சிபிஐயால் விசாரணை செய்யப்பட்ட இவ்வழக்கில் லாலுவிற்கு ஏழு வருடங்கள் சிறை தண்டனை கிடைத்தது.

இதனால், கடந்த மூன்றரை வருடங்களாக ஜார்கண்டின் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் லாலு. இதில் சில மாதங்களாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக லாலு டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவர் மீதான முக்கிய மூன்று வழக்குகளில் இரண்டில் மட்டுமே லாலுவிற்கு ஜாமீன் கிடைத்திருந்தது.

இதன் காரணமாக, சிறையிலிருந்து விடுவிக்கப்படாமல் இருந்த லாலுவிற்கு இன்று மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. இது சட்டவிரோதமாக தும்காவின் கரூவூலத்தில் லாலு பணம் பெற்றதன் வழக்கு ஆகும். லாலுவின் உடல்நிலையை அவரது குடும்பத்தார் சுட்டிக் காட்டி ஜாமீன் கேட்டு வந்தனர். தொடர்ந்து பலமுறையாக நிராகரிக்கப்பட்ட லாலுவின் ஜாமீன் அவரது தண்டனைக்காலத்தில் பாதியை சிறையில் கழித்த பின் கிடைத்துள்ளது.

இவரது ஜாமீன் நிபந்தனைகளின்படி, லாலு ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஜாமீன் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். அவரது தண்டனையில் விதித்திருந்த ரூ.10 லட்சத்தையும் லாலு செலுத்த வேண்டும். பிஹாரில் அவர் தங்கும் குடியிருப்புடன், லாலுவின் கைப்பேசி எண்ணையும் மாற்றக் கூடாது. இந்த ஜாமீனில், வெளிநாடுகளுக்கு செல்லவும் லாலுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லாலுவின் வரவால் பிஹார் மற்றும் தேசிய எதிர்கட்சிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு லாலு, எதிர்க்கட்சித் தலைவர்களில் மிகவும் வலுவானவர் எனக் கருதப்படுவது காரணம். இவரது வரவால் பிஹாரின் அரசியலில் மாற்றம் வரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது. கடந்தவருடம் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 15 தொகுதி தோல்வியால் மெகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது.

இதனால், அக்கூட்டணியின் தலைவரான லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வராக முடியாமல் போனது. இதற்காக லாலு ராஞ்சி மருத்துவமனை சிகிச்சைல் இருந்தபடியே ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏக்களை தம் பக்கம் இழுக்க முயன்றார். இதன் மீதான தொலைபேசி உரையாடலும் வெளியாகி சர்ச்சையானது. இச்சூழலில் லாலுவிற்கு கிடைத்த ஜாமீன் அவரது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினரையும் உற்சாகப்படுத்தி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்