Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆக்சிஜன் கிடைக்காமல் கர்நாடக அரசு ஆஸ்பத்திரியில் மூச்சுத்திணறி 8 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

ஏப்ரல் 28, 2021 05:34

கோலார்: கர்நாடக அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி 8 கொரோனா நோயாளிகள் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் ஆக்சிஜன் கிடைக்காமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகிறார்கள். நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. கர்நாடகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

அங்குள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அரசு மருத்துவமனைகளில் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆக்சிஜன் கிடைக்காமல் அரசு ஆஸ்பத்திரியில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் கோலார் டவுனில் எஸ்.என்.ஆர். அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் 20 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இரவு அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது.

இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் சரியாக கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் 8 பேர் பரிதாபமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை சுகாதாரத்துறையினர் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். டாக்டர்கள் அலட்சியத்தால் தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியதாகவும், இதன் காரணமாக சிகிச்சை கிடைக்காமல் 8 பேர் இறந்து விட்டதாகவும் குடும்பத்தினர், உறவினர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து மந்திரி சுதாகர் நேற்று சிக்கபள்ளாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கும் விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டதில்மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். இது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மெத்தன போக்கையே காட்டுகிறது. பொறுப்பற்ற முறையில் பணியாற்றி 8 பேர் உயிரிழப்புக்கு காரணமான எஸ்.என்.ஆர். அரசு ஆஸ்பத்திரியின் ஆக்சிஜன் இணைப்பு பிரிவு அதிகாரி உள்பட 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்