Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி: கடம்பூர் ராஜூ

பிப்ரவரி 01, 2019 01:43

கோவில்பட்டி: கழுகுமலையில் நடந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அனைத்து மாநிலங்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு பேரணியில் தமிழகத்திலிருந்து செய்தித்துறை சார்பில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. 1978-ம் ஆண்டுக்குப் பின்பு தற்போது தான் இந்த பரிசு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிக்கு அவரது சொந்த ஊரான கோவை வையம்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை அவரது பிறந்த தினமான வருகிற 6-ந் தேதி தமிழக முதல்வர் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். 

பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தைப் பெறுகின்ற வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன. எப்போதுமே தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமையும். 

தேசிய கட்சிகளை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. அங்கு தி.மு.க. தலைமை வைக்கிறது. அதேபோல் அ.தி.மு.க.வை தலைமையாக ஏற்கும் கட்சிகளுடன் தான் அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்  என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தலைப்புச்செய்திகள்