Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க. அரசே ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்ய வேண்டும்: வைகோ

மே 03, 2021 06:08

சென்னை: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா இரண்டாம் அலை பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதனைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பு, புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமர இருக்கின்ற தி.மு.க. அரசிற்கு முன் உள்ள பெரிய சவால் ஆகும். அதற்காக சில கருத்துகளை, தமிழக அரசுக்கு வேண்டுகோளாக முன் வைக்க விரும்புகிறேன்.

* அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ற எண்ணிக்கையிலான மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு உடனே பணியில் அமர்த்த வேண்டும்.

* பன்னோக்கு மற்றும் உயர் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள, ‘செயற்கை சுவாசக் கருவியுடன்' கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. குறைந்தபட்சம், உயர் அழுத்த மூச்சுக்கருவிகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளையாவது ஒன்றிய தலைமை அரசு மருத்துவமனைகளில், உடனடியாக உருவாக்க வேண்டும். இதன்மூலம், நிறைய உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

* இந்தியா முழுமையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்ற ‘ரெம்டெசிவிர்' மருந்து தட்டுப்பாடு அதிகமாக உள்ள நிலையில், மராட்டியம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் வங்காள தேசத்தில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து வருகின்றது. அதைப் போல, தமிழக அரசும், ரெம்டெசிவிர் மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்ய வேண்டும்.

* கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் எந்த வகையான முக கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் உரிய, பாதுகாப்பான முக கவசங்களைத்தான் அணிந்து உள்ளார்களா? என்பதை, காவல்துறையின் மூலம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்