Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா நிவாரண நிதியாக விராட் கோலி, அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ரூ.2 கோடி உதவி

மே 07, 2021 10:32

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து, கரோனா நிவாரண நிதியாக ரூ.2 கோடியை தங்கள் பங்களிப்பாக அளித்துள்ளனர். கெட்டோ எனும் சமூக வலைத்தளத்தின் மூலம் கரோனா நிவாரண நிதியாக ரூ.7 கோடி திரட்ட விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் முடிவு செய்தனர். அதில் முதல்கட்டமாக தங்கள் பங்களிப்பாக ரூ. 2 கோடியை வழங்கியுள்ளனர்.

நாட்டில் கரோனா வைரஸ், 2-வதுஅலை உலுக்கி வருகிறது, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்திய மக்கள் படும் சிரமங்களைப் பார்த்து உலக நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன, உள்நாட்டளவிலும் உதவிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தங்கள் பங்களிப்பாக கோலியும், அவரின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் ரூ.2 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர். இது குறித்து வெளியி்ட்ட அறிவிப்பில் விராட் கோலி கூறியிருப்பதாவது:

கோலி, அனுஷ்கா சர்மாவும் இணைந்து கரோனா நிவாரண நிதியான ரூ.7 கோடி திரட்ட முடிவு செய்தோம். இதற்காக கெட்டோ தளத்தில் இருவரும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளோம். அதில் முதல் பங்களிப்பாக இருவரும் ரூ.2 கோடி வழங்கியுள்ளோம். இந்தப் பிரச்சாரம் 7 நாட்கள் நடக்கும், அதன்பின் அந்த நிதி ஏசிடி அமைப்புக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் கரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆக்சிஜன், மருத்துவ வசதிகள், தடு்பபூசி விழிப்புணர்வு, தொலைபேசி மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

நமது நாட்டின் வரலாற்றில் நாம் இதற்குமுன்னெப்போதும் இல்லாத நாட்களை கடந்து வருகிறோம், அனைவரும் ஒன்று சேர்ந்து இருந்து, பலரின் உயிரைக் காப்பதுதான் தேசத்துக்கு அவசியம். கடந்த ஆண்டிலிருந்து மக்கள் சந்தித்துவரும் துன்பங்களைப் பார்த்து நானும் அனுஷ்காவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம்.
கரோனாவுக்கு எதிரானப் போரில் கடந்த ஆண்டிலிருந்து நானும், அனுஷ்காவும் எங்களால் முடிந்த அளவு பலருக்கும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறோம். இந்தியாவுக்கு இன்னும் அதிகமான ஆதரவு தேவைப்படுகிறது.

மிகுந்த நம்பிக்கையுடன் இந்த நிதிதிரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம், தேவைப்படும் மக்களுக்காக முடிந்தவரை அதிகமான பணத்தை திரட்டமுடியும் என நம்புகிறோம். தேசத்தின் சக மக்களுக்காக மக்கள் முன்வந்து அதிகமான உதவிகளை வழங்குவார்கள் என நம்புகிறோம். நாம் ஒன்றாக இணைந்தால், இந்த பெருந்தொற்றை கடந்து வர முடியும்” எனத் தெரிவி்த்துள்ளார்.

அனுஷ்கா சர்மா அந்த அறிக்கையில் கூறுகையில் “ கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால், நாட்டின் சுகதாார முறையே திணறுவதைப் பார்த்தபோதும், மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதைப் பார்த்தபோதும் எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. விவரிக்கமுடியாத அளவுக்கு மக்கள் அனுபவித்த துன்பங்களைப் பார்த்து நானும், விராட் கோலியும் ஆழ்ந்த வேதனை அடைந்தோம். நாங்கள் திரட்டும் இந்த நிதி, கரோனா வைரஸுக்கு எதிராகப் போரிட உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்